இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்
இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்றுஅதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை, தங்கள் விமானங்களை இந்திய எல்லைக்குள் வைத்தபடியே, முரிட்கே, பஹாவல்பூர் மற்றும் கோட்லி, முஸாஃபராபாத் பகுதிகளில் சர்வதேச எல்லையைத் தாண்டி, பொதுமக்கள் வாழும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவம், இது பாகிஸ்தானின் இறைமையை சீர்குலைக்கும் செயல் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்துக்கும் இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இது "இந்தியா ஏற்கனவே திட்டமிட்ட ஒரு போர் நடவடிக்கை" என பாகிஸ்தான் பிரதமர் முகம்மட் ஷெஹ்பாஸ் ஷரீப், குற்றம்சாட்டினார்.
“இந்தியாவின் இந்த போர் துவக்கத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலை வழங்கும் உரிமை பெற்றிருக்கிறது. அந்த பதில் ஏற்கனவே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் மக்கள் மற்றும் பாகிஸ்தான் படைகள், எதிரிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை நன்கு அறிவார்கள். எதிரியின் தீய எண்ணங்கள் எப்போதும் தோல்வியடையும்,” என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை பிரதமர் நடத்தவுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை இந்தியா பாகிஸ்தான் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டியது. ஆனால் பாகிஸ்தான் இதனை முற்றாக மறுக்கிறது.
இதேவேளை, பாகிஸ்தானும் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.