அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்..! 12 பேர் உயிர் பலி - பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான அதன் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(04.06.2026) முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஹொரணை அங்குருவத்தோட்டை - படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணையில் இல்லத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(04.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் உயிரிழப்பு
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தீ விபத்தில், 12 பேர் மேல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், 7 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 51 பேர் முதியோர் இல்லத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்
இந்நிலையில், சம்பவம் நடக்கும் போது இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அங்கு இருக்கவில்லை என்பதுடன், இந்த இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள இருமாடி வீடு ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாகப் பிரதேசவாசிகள் மிகுந்த ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, மருத்துவர் ஒருவர், தாதி ஒருவர், நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட மனநல நோயாளர்களைப் பராமரிக்கும் இவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் செல்வதற்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளும், இந்த நிறுவனத்துக்குள் இருக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தீ பரவிய நேரத்தில் ஹொரணை தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்கள் வருகை தந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் கொண்டு வரச் சென்றமையினால் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.