தீபச்செல்வனின் நூல் விவகாரம்: அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை
பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைத்த விவகாரத்தில் அரசாங்கம் பாரிய தோல்வியைத் தழுவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளரும், வரலாற்றிஞருமான பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எழுத்தாளர் தீபச்செல்வனின் சில நூல்களை சுங்கத் திணைக்களத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்தி அடைந்த பாரிய தோல்வியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது நிலக்கரி ஊழல் மோசடிகளுக்கு நிகரான பாரிய அரசியல் தோல்வியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு உதவிய இரண்டு பிரதான தூண்களுக்கு இந்த நடவடிக்கையின் ஊடாக பாதக நிலை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகிய இரண்டு விடயங்களும் தற்போதைய ஆட்சியாளர்களின் தேர்தல் வெற்றியில் முக்கிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி விவகாரத்தில் அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான நிலைபாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டதாகவும் தீபச்செல்வனின் நூல்களை முடக்கியதன் ஊடாக கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விவகாரம் தொழில்நுட்பப் பிரச்சினை கிடையாது எனுவும் அது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நூல்களில் தமிழ் கடும்போக்குவாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளபப்டும் இந்த காலத்தில் நூல்களை தடுப்பது அந்த நூல் பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டக் கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்த நூல்களின் பீ.டி.எப் வடிவத்தை பலர் இணையத்தில் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் மஹிந்த மற்றும் கோட்டாபய பின்பற்றிய அணுகுமுறையை இந்த அரசாங்கமும் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற பொறியில் சிக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கலாச்சாரம் தொடர்பான விடயங்களை தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடுத்துவது பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதில் அரசாங்கத்தின் பலவீனத்தை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து நூல்களை விடுவிக்கத் தவறினால் அரசாங்கத்தின் இருப்பினை பாதிக்கக் கூடிய பாரிய அரசியல் பிரச்சினையாக உருவாகக் கூடும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்திக்காக பிரசாரங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.