ஜேவிபி தலைவர்கள் மீது உறுப்பினர்கள் அதிருப்தி
ஜேவிபி கட்சியின் பிரதான தலைவர்கள் மீது கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் பிரதான தலைவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் வைத்திருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் ஜேவிபி கட்சிக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த முழு நேர உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை விட்டு விலகிச் செல்ல தொடங்கியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
காட்சியின் கடந்த கால தலைவர்களாக செயல்பட்ட ரோஹன விஜேவீர, சோமவன்ச அமரசிங்க போன்ற தலைவர்களின் அர்ப்பணிப்பை கண்டு எவ்வித கொடுப்பனவும் பெற்றுக் கொள்ளாது தங்களது குடும்பத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் புறந்தள்ளி கட்சிக்காக பட்டினி இருந்து சேவையாற்றிய முழு நேர உறுப்பினர்கள் கட்சியின் தற்போதைய தலைவரது செயற்பாடுகளை கண்டு கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த காலங்களில் ரஷ்யாவில் சார் மன்னன் செயற்பட்டது போல் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கோடீஸ்வரர்களாக மாறி ஆடம்பர வாழ்க்கை வாழும் அதேவேளை கட்சி உறுப்பினர்கள் பட்டினியில் வாட நேரிட்டுள்ளது என டோக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.