எரிவாயு கசிவு வெடிப்புகள் குறித்து இதுவரையில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை
எரிவாயு கசிவு வெடிப்புக்கள் தொடர்பில் இதுவரையில் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எரிவாயு கசிவு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் காத்திரமான விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ விமர்சனம் செய்யும் நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக விசாரணை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவு தொடர்பில் லிற்றோ நிறுவனத்தின் ஒர் பிரதிநிதியை அழைத்து விசாரணை செய்ய குற்ற புலனாய்வுப் பிரிவிற்கு முடியாது போயுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் ஏற்பட்ட மாற்றங்கள் அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லிற்றோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதனை அரசியல் ரீதியாக அழுத்தங்கள் தடுத்து வருவதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.