மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை! - சரத் வீரசேகர
மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து தற்போது தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு நாடு - ஒரு சட்டம் என்றால், ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது. மாகாணசபைத் தேர்தலை நடத்த தற்போது தீர்மானிக்கவில்லை.
நாங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம். அதில் மத்திய அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால், மாகாணசபைகள் இருப்பதில் பிரச்சினையில்லை என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சட்ட ரீதியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெளிவாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.