பசில் நாடு திரும்பினார் என்று எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை-திஸ்ஸ அத்தநாயக்க
பசில் ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பினாலும் நாட்டுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை எனவும் அவர் நாடு திரும்பியதன் மூலம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வழி நடத்தும் நூல் அவரது கையில் இருப்பது தெளிவாகியுள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏற்கனவே இலங்கை வந்த போது பெரிய மாற்றம் ஏற்படும் என்றனர்
பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளதால், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது.
பசில் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் போது, அவர் வந்த பின்னர் அலாவுதீனின் அற்புத விளக்கை கொண்டு வந்தது போல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் கூற ஆரம்பித்தனர்.
எனினும் எதுவும் நடக்கவில்லை அவர் நிதியமைச்சரானதும், நாடு வங்குரோத்து அடைந்தது மட்டுமே நடந்தது. இதனால், மீண்டும் பசில் இலங்கை திரும்பினார் என்று எந்த மாற்றமும் ஏற்படாது.
பசில் ராஜபக்சவே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பின்னால் இருந்து இயக்குகின்றார்
மாற்றங்களை ஏற்படுத்த அவர் சக்கர தேவன் இல்லை. பசில் ராஜபக்சவின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் என்பன காரணமாக நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்துவது பசில் ராஜபக்ச என்பது மட்டும் மிகவும் தெளிவாகியுள்ளது. அவரே அமைச்சு பதவிகளுக்கு ஏனைய பதவிகளுக்கு பரிந்துரைகளை வழங்குகிறார்.
இவற்றின் மூலம் பின்னால் இருந்துக்கொண்டு, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வழிநடத்தும் நூல் பசில் ராஜபக்ச என்பதுதான் உண்மையான கதை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.