புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 10 விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு-கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு விசேட தொடருந்து இயக்கப்படும், அதே நேரத்தில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் தொடருந்து ஒன்று பயணிக்கவுள்ளது.
தொடருந்து சேவைகள்
மேலும், இன்று இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு தொடருந்து இயக்கப்படும், அதே நேரத்தில் காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு தொடருந்து ஒன்று இயக்கப்படவுள்ளது.
மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட தொடருந்து ஒன்று பயணித்ததுடன், அந்த தொடருந்து மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த 10 விசேட தொடருந்துகள் ஊடாக புத்தாண்டு பருவம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் 31 பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.
பேருந்துகள்
இதற்கிடையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகளை இன்றைய தினம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |