பொலிஸ் மா அதிபர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்
நாட்டின் அடுத்த பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(04.07.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பதவிக்காலம் கடந்த திங்கட்கிழமையுடன் நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில், தற்போதைய பொலிஸ் சேவைக்கால அடிப்படையில், நிர்வாகத்துறையின் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.எஸ்.பதிநாயக்க, சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்பிரிவுக்கான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம் தர்மரத்ன ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
ஒரு வார கால தாமதம்
இவற்றில் மூன்று பேரின் பெயர்கள் சேவைக்கால அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், புதிய பொலிஸ் மா அதிபரை பெயரிடுவதில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள ஒரு வார காலதாமதம், குற்றம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்குவது உள்ளிட்ட நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |