கடுமையான விதிகளுடன் இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - பொலிஸாருக்கு கிடைக்கப்போகும் அதிகாரம்
ஒருங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய குற்ற விசாரணை பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரணமால் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை முன்னெடுப்பதற்கான அதிகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சட்டத்தின் விதிகளினூடாக சிறையிலுள்ள குற்றவாளிகளை மீண்டும் பொலிஸார் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.
இவ்வாறான நபர்களை இன்றுங்கூட, நாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே தடுத்து வைத்துள்ளோம். இது தொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மிகக் கடுமையான சட்டம் ஒன்று வரவுள்ளது.

இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்படவுள்ளது. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறையிலிருக்கும் பலர் உள்ளனர்.
புதிய சட்டம்
பல குற்றங்களுடன் தொடர்புடைய இவர்களின் பெயர்களைக் கேட்டவுடனே மக்கள் பீதியடைவதுண்டு. இவ்வாறானவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து பொலிஸ் காவலில் விசாரணை நடத்தும் அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் பொலிஸாருக்கு வழங்குகிறது.
வெளிநாடுகளில் இருப்பவர்களின் சொத்துக்களை முழுமையாக முடக்குவதற்கும் தற்போது சட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.