நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது
தித்வா புயலினால் சேதமடைந்து கடந்த 18 நாட்களாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டிய–கண்டி பிரதான வீதி, இன்று வாகனப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மண்சரிவால் வீதியில் தேக்கமடைந்த மண் குவியல்கள் அகற்றப்பட்டு, நிரந்தர தீர்வு அமல்படுத்தப்படும் வரை பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் வீதி தற்காலிகமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வீதியின் மேற்பகுதியில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதால், கூடுதல் எச்சரிக்கைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை வாகன சாரதிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.
அதேசமயம், இந்த வீதியில் கனரக வாகனங்களின் இயக்கத்திற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்போது திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் உலப்பனே–கண்டி வீதி, சுமார் ஒரு வாரத்திற்குள் மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.