போர் பதற்றத்திற்கு மத்தியில் நேட்டோவின் அதிரடி தீர்மானம்
ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி இன்று அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
ஈராக்கில் பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், அங்கிருந்து ஐரோப்பாவிற்குப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவிற்கான நேட்டோ உயர்மட்டத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் (Alexus Grynkewich) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ பணியாளர்களை ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய உதவிய ஈராக் குடியரசு மற்றும் அனைத்து நட்பு நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உண்மையான தொழில்முறை வல்லுநர்கள் என பாராட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களில் போலந்து, ஸ்பெயின் மற்றும் குரோஷியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தன.
ஈராக்கில் இருந்த நேட்டோ படைகள் நேரடிப் போரில் ஈடுபடவில்லை. மாறாக, ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் அவர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகிய பணிகளையே செய்து வந்தன.
ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், இந்த ஆலோசனைப் பணி இனி இத்தாலியின் நேப்பில்ஸ் நகரில் உள்ள ராணுவத் தலைமையகத்திலிருந்து தொடரும் என நேட்டோ அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈராக் மண்ணிலிருந்து சர்வதேசப் படைகள் வெளியேறுவது அந்தப் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.