நஸீர் அஹமட்டின் உடைமைகள் தீ வைப்பு விவகாரம்: கைதாகியவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் உட்பட வீட்டின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, விடுதி, கடை என்பன தீக்கிரையாக்கியதுடன், 3 ஆடைத்தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியுள்ளனர்.
இதனையடுத்து ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் ஒன்றிணைந்து ஆடை தொழிற்சாலை சேதமாக்கியவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடை தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பொலிஸார் இடைமறித்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் வாக்குறுதியளித்தனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது விடுதியில் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தீயிடப்பட்ட விடுதி மற்றும் கடை ஆகிய கட்டடங்களை வாடகைக்குப் பெற்று அதனை நடாத்தி வந்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும்
நடவடிக்கையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் ஈடுபட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.