ஹரக் கட்டாவினால் ஏற்படப்போகும் ஆபத்து! நெருக்கடியில் அரசாங்கம்
ஹரக் கட்டாவுக்கு இதுவரை பாரிய குற்றம் தொடர்பில் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு மயக்க மருந்து கலந்து கிரிடொப்பி கொடுத்த வழக்கு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு ஹரக் கட்டாவிடம் பணம் பெற்றுக் கொண்டது முதல் அவரை இன்றுவரை தடுத்து வைத்திருப்பதற்கு முன்னாள் (CID) அதிகாரிகள் குழுவொன்று செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதாவது, தற்போது உள்ள அதிகாரிகள் அல்ல, இதற்கு முன்னர் இருந்த மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகளும், பொலிஸுக்கு வெளியே இருக்கும் ஒரு குழுவினரும் இணைந்தே, இந்த சதித் திட்டத்தை செய்துள்ளனர்.
நீண்டகாலம் தடுத்து வைத்து பயமுறுத்தல்
இவர்கள் நீண்ட காலம் தடுத்து வைத்து, அவரைப் பயமுறுத்தி பயமுறுத்தி அவரிடமிருந்து பணத்தைப் பறித்தமை தற்பொழுது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கும் தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டாவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் முன்னாள் அதிகாரிகள் இதுவரை 3 கோடி, 5 கோடி, 6 கோடி, 2 கோடி, 20 கோடி எனப் பணத்தைப் பெற்றுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே 25 முதல் 30 கோடி வரை வாங்கியுள்ளனர். அவர்கள் அந்தப் பணத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரைப் பயமுறுத்தி, அச்சுறுத்தி வாங்கியுள்ளனர்.
சில அதிகாரிகள் தங்களது வாகனங்களின் குத்தகை (Leasing) தவணைகளைச் செலுத்த வைத்துள்ளனர். சிலர் மடிக்கணினிகளை (Laptops) வாங்கியுள்ளனர்.
சிலர் 50 இலட்சம், 30 இலட்சம் என வெவ்வேறு கிளைகள் ஊடாகப் பெற்றுள்ளனர். தற்பொழுது அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.சிலர் ஓய்வுபெற்று சென்றிருந்தாலும், எதிர்காலத்தில் அவர்கள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளன.
அரசியல்வாதிகளின் தொடர்பு
சில அரசியல்வாதிகளும் இதனைப் பகடைக்காயாக்கிக் கொண்டு, ' 'லலித் வீரதுங்கவிடம் சொல்கிறேன்', 'சாகல ரத்நாயக்கவிடம் சொல்கிறேன்' என்று பொய்களைக் கூறி, ஏமாற்றி 3 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளனர்.
தேஷபந்து தென்னகோன் காலப்பகுதியில் இருந்த அந்தக் குழுவினர், ஹரக் கட்டாவிடமிருந்து தாராளமாகப் பணம் பெற்றுள்ளமை தற்பொழுது உறுதியாகியுள்ளது.

எனவே, தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹரக் கட்டாவின் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அனைவர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.