நாட்டின் தலைவராக வருவதற்கு நாமல் ராஜபக்சவுக்கு தகுதியுண்டு - இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
நாட்டின் தலைவராக வருவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அதிஷ்டம் இருந்தால், அது நடக்கும் எனவும் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதமராக பதவிக்கு வருவார் என பேசப்பட்டு வருவது குறித்து உங்களது கருத்து என்ன என செய்தியாளர் ஒருவர், பிரேமஜயந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரேமஜயந்த,
தலைவர்கள் எதிர்பாராத வகையில் உருவாவது போல், தலைவர்கள் எதிர்பாராத வகையில் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது வரலாற்று அனுபவத்தில் உள்ளவை.
எனினும் நாமல் ராஜபக்சவுக்கு தலைமைத்துவத்திற்கு தேவையான கல்வித்தகுதி குடும்ப பின்னணி உட்பட தகுதிகள் இருக்கின்றன.
சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ள நாமல் இரண்டு முறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்.
எனினும் நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவது எந்த காலக்கட்டத்தில் நடக்கும் என்பதை கூற முடியாது எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.