நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாக அதிகாரி மறைவு - க.வி.விக்னேஸ்வரன் இரங்கல்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண(Kumaradasa Mappana) முதலியார் இறைபதமடைந்த நிலையில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்(C.V. Wigneswaran) இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவு குறித்த இரஙகல் செய்தியொன்றை மிகவும் ஆழ்ந்த துயரத்தின் மத்தியில் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
மறைந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் 1964ஆம் ஆண்டு மார்கழி 1ம் நாள் தொடக்கம் தமது இறுதி மூச்சுவரை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரியாகக் கடுமையாக உழைத்து தமது 92ஆவது அகவையில் தமது பூவுலக கடமைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்து ஆறுமுகக் கடவுளின் பாதாரவிந்தங்களைப் பற்றிச் சென்றுள்ளார். அவர் மறைவு எம்மை ஆறா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கிட்டத்தட்ட 57 வருடங்களாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தை எந்தவித குறைவுமின்றி அதன் நிர்வாகத்தைத் திறம்பட முன்னெடுத்துச் சென்றமை அவரின் நிர்வாகத் திறனைப் படம்போட்டுக் காட்டுகின்றது.
அவரின் நிர்வாகத்திறமைக்கு அவரின் இயல்பான நிர்வாகத் திறமையுடன் இணைந்து அவரின் அடிப்படை கல்வி அறிவு மற்றும் மொழித்திறன் என்பன பக்கபலமாக அமைந்திருந்தன. அவரின் பாரியார் அவருக்கு உற்றதுணையாக இருந்தார். அவரின் நிர்வாகத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டதொன்று.
ஆலயத்தில் அடியவர்களுடன் தானும் ஓர் அடியவனாக எழிமை தோற்றத்தில் காட்சியளித்த அவரின் கண்கள் ஆலயத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் ஊன்றி அவதானித்துச் சீர்செய்யத் தவறியதில்லை.
ஆலயத்தினுள் அரசன் தொடக்கம் கடைநிலை ஆண்டிவரை சமநிலை உடையவர்கள் என்பதை இறுதிவரை நிலைநிறுத்தியவர். எந்தவொரு பிரமுகரின் வருகைக்காகவோ வேறு எந்தக் காரணங்களுக்காகவோ ஆலயத்தின் பூஜை வழிபாட்டு நேரங்களில் மாற்றம் விளைவிக்க அவர் அனுமதித்ததில்லை.
தமது குடும்ப அங்கத்தவர்கள் கூட சாதாரண அடியவர்களுடன் சேர்ந்து ஆலய தரிசனத்தை மேற்கொள்ளலாமே தவிர அவர்களுக்கென எந்தவொரு பிரத்தியேக சலுகையையும் வழங்க அவர் அனுமதித்ததில்லை.
அன்னாரின் பிரிவால் கலங்கி நிற்கும் அடியவர்களை ஆற்றுப்படுத்தும் தூய பணியில் இளைய எஜமானார் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்று தந்தையின் வழியில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்.
அவருக்குத் தேவையான
சக்தியையும் மனோபலத்தையும் முருகப் பெருமான் அருள வேண்டுமென
இறைஞ்சுவதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் அன்பு மனைவி
உற்றார் உறவினர்கள் அனைவரையும் இப்பெருந்துயரத்திலிருந்து மீள இறைவன்
வழி சமைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.