பிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு
மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷயின் (Mahinda Rajapaksa) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய மீலாதுன் நபி தின விழா 2021 ஐ முன்னிட்டு நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் பிரதமர் தலைமையில் இதன் போது வெளியிடப்பட்டது.
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) குறித்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையை பிரதமருக்கு வழங்கினார்.
முஹம்மது நபி நாயகம்த்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன் போது பிரதமரினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) இதன் போது பிரதமருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிவைத்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விகரமநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்(Kather Mastan), மர்ஜான் ஃபலீல் (Marjan Falil), எச்.எச்.எம்.ஹாரிஸ்(H.H.M.Harris), இஷான் ரஹுமான்(Ishan Rahman), நஸீர் அஹமட்(Nasir Ahmed), அலி சப்ரி ரஹீம்
(Ali Sabri Rahim) மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர (Jagath P. Wijeweera), தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன(Ranjith Ariyaratne), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.