முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளிலிருந்து நினைவேந்த அழைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடா வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே இடம்பெறுவது வழக்கம். இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது எமது உரிமை சார்ந்த, எமது விடுதலை சார்ந்த, எமது வாழ்வியல் சார்ந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட எமது தமிழினத்தின் துன்பியல் அனுபவங்களை நினைவு கூருவதாக அமைகின்ற ஒரு நிகழ்வு தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இது எமது எதிர்காலத்துக்கு, கடந்த காலத்தில் எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்லி நிற்கின்ற ஒரு நிகழ்வு என்பது மறுக்க முடியாது.
இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி அண்மையிலே இராப்பொழுதிலே உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. அதிலே இருந்த ஒரு தூண் அடித்து நொருக்கப்பட்டது. கரங்கள் முறித்து எறியப்பட்டிருந்தன.
இது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு அங்கங்கள் செல்களால் வெட்டி எறியப்பட்ட அந்த நிகழ்வை சுட்டி நிற்பதாக இருந்தது. மீண்டும் நாம் ஒரு இனமாக எழுந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை சுட்டி நிற்கின்றது.
இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் கோவிட் தாக்கத்தினாலே இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதை மன வருத்தத்தோடு, கனத்த உணர்வுகளுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் இருந்து பணியாற்றிய சில பணியாளர்கள் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் இருக்கக்கூடியவர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் மூன்று நாள் முடக்க சூழ்நிலை உருவாகியிருப்பதால் இந்த நிகழ்வுகளை நாங்கள் இம்முறை அந்த இடத்தில் நிறைவேற்றுவது கடினமாகிப்போயுள்ளது.
எனவே அன்பார்ந்த தமிழ் உறவுகளே இந்த நிகழ்வுகளை உங்கள் ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் நிறைவேற்ற அழைத்து நிற்கிறோம். சிறப்பாக நாம் ஏலவே கேட்டுக்கொண்டது போல மாலை 6 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஒலிக்க அன்புரிமையோடு நினைவுப்படுத்துகிறோம்.
மணிகள் ஒலிப்பதை தொடர்ந்து ஒவ்வொரு ஆலயங்களிலும், பொது இடங்களிலும் உங்கள் வீடுகளிலும் அக வணக்கத்திலே ஒரு நிமிடம் இணைந்து கொள்ள கேட்டு நிற்கின்றோம். அதை தொடர்ந்து விளக்கு ஒன்றை உங்களுடைய வாயிலிலே ஏற்றி இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுடைய ஆன்மா இழைப்பாற மண்றாடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு
முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்கள் தங்களது உயிரை பிடித்துக்கொள்வதற்காக
முள்ளிவாய்க்கால் கஞ்சியை உண்டார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம். ஆகவே அந்த
முள்ளிவாய்க்கால் கஞ்சியை இந்த நாளில் ஒவ்வொருவரும் இல்லத்தில் தயாரித்து
உண்பதுடன், எமது இளைய சமுதாயத்துக்கு, இதை செய்கிறோம் என்பதை
ஒவ்வொருவருக்கும் எடுத்து இயம்புமாறு அன்புரிமையுடன் கேட்டு, இறந்த எமது
உறவுகளை உணர்வு ரீதியாக, எழுச்சி ரீதியாக நினைவு கூருவோம் என அன்புரிமையுடன்
கேட்டு நிற்கின்றோம் என்றும் தெரிவித்துளள்ளார்.