முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் தொடர்ந்து 04.01.2022 குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை நேற்று 18.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணைகளை 18.01.2022 நேற்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,
குறித்த ஆசிரியர் ஜந்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் 25000 காசு பிணையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படகூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் கூடடி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வழக்கு விசாரணைகள் 05.04.2022 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.