அரசு என்னை அச்சுறுத்துகிறது;முறைப்பாடு செய்த எதிர்க்கட்சி எம்.பி
அரசாங்கம் தன்னை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முஜுபுர் ரஹ்மான் எம்.பி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (16.12.2025) பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணைகள்
தொடர்ந்து பேசிய முஜுபுர் ரஹ்மான் எம்.பி,
மிரியான மற்றும் நுகேகொடை பொலிஸார் நான் வீட்டில் இல்லாத நிலையில் எனது பதிவு மற்றும் பல விடயங்களை தொடர்பில் விசாரித்துள்ளனர்.இது தொடர்பில் அறிந்து கொண்ட நான் நுகேகொடை பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபரை கேட்டபோது அவர் இது தொடர்பில் தெரியாது என தெரிவித்தார்.
மேலும் பொரலையிலுள்ள எனது மனையின் வீட்டுக்கு சென்றும் பல விபரங்களை கேட்டுள்ளனர்.அதன் பின்னர் நான் நினைத்தேன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நான் தொடர்பான விபரங்களை கேட்டிருக்கலாம் என அதை விட்டுவிட்டேன்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை எனது தங்கை வசிக்கும் கல்கிஸ்ஸை வீட்டில் நான் தொடர்பில் கேட்டுள்ளனர்.அது எனது சொந்த வீடாகும்.நான் அங்கிருந்து வந்து 15 வருடங்களாவதாகவும் இப்போது கொல்லன்னாவையில் வசிப்பதாக தங்கை கூறியுள்ளார்.
அங்கு குற்றவியல் விசாரணைகள் அதிகாரிகள் இருவர் வந்துள்ளனர்.நான் சிம் காட் ஒன்றை தொலைத்ததாகவும் அது தொடர்பில் விசாரிக்கவே வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் நான் அவ்வாறான ஒரு முறைப்பாட்டை செய்யவில்லை. இந்த காரணங்களை நோக்கும் போது அரசாங்கம் என்னை அச்சுறுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே தோன்றுகிறது.
அதனாலே முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.