துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்: அதிர்ச்சி தகவல்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000 ஐ தாண்டியுள்ள நிலையில், 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று முன்தினம் (06.02.2023) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்டு
பேரழிவைச் சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் தடைமட்டமாகியுள்ளன.
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அனைத்துலக உதவியுடன், துருக்கியில் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்டு வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, துருக்கியில் 7,900 பேர் பலியாகி இருப்பதாகவும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களால் அங்குள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து நிரம்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
20 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும்
இந்நிலையில், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் துருக்கி, சிரியாவில் 2.3 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், 50 லட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான உடனடி உதவிகள் அவசியம் என்றும் அதற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.