இஸ்ரேலில் மோடி: காவி நிற ஆடை ஒற்றுமையால் மலர்ந்த சுவாரஸ்யமான தருணம்
9 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பென்-குரியன் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பு நிகழ்வின் போது ஒரு சுவாரஸ்யமான தற்செயலான நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சுவாரஸ்யமான நிகழ்வு
பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் பையில் இருந்த Pocket Square துணியின் நிறமும், சாரா நெதன்யாகு அணிந்திருந்த உடையின் நிறமும் ஒரே மாதிரியாக (காவி நிறம்) இருந்தது.
இதனைப் பிரதமர் நெதன்யாகு சுட்டிக்காட்டியதும், "இது காவி நிறம்" (That’s Saffron) என்று பிரதமர் மோடி புன்னகையுடன் பதிலளித்தார்.

இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
நெதன்யாகுவுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மோடி தனது 'X' தளத்தில் பதிவிட்டதாவது: "தொழில்நுட்பம், நீர் முகாமைத்துவம், விவசாயம் மற்றும் திறமை அடிப்படையிலான கூட்டாண்மை போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்" என குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நட்பு
மேலும் பிரதமர் மோடியை ஒரு "சிறந்த தலைவர்" எனப் புகழ்ந்த நெதன்யாகு, "எங்களுக்கிடையிலான தனிப்பட்ட நட்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது இஸ்ரேல் நாடாளுமன்றமான கினெசெட்டில் (Knesset) பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
இதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
2017 ஆம் ஆண்டு மோடியின் பயணத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு, விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |