காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்: அம்பாறை கடற்றொழிலாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
“காணாமல் போன கடற்றொழிலாளர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் கடற்றொழிலாளர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம்” என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தெரிவித்துள்ளார்.
கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற கடற்றொழிலாளர்கள் பல நாட்களாகியும் கரை
திரும்பவில்லை.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கருத்து தெரிவிக்கையில்.
காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விபரம்
”கல்முனை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து கடந்த (26.09.2022)ஆம் திகதியன்று மாலை ஏ.எல்.எம். உவைஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்ற கடற்றொழிலாளர்களான கல்முனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி கபீர் (வயது 50), எம்.என்.ஹில்மி (வயது 33) ஆகிய கடற்றொழிலாளர் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் காணாமல் போன தினத்திலிருந்து கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 12 தினங்களாக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை.
அத்துடன், கடந்த 28ம் திகதி மாலை 05 மணியளவில் வாழைச்சேனை பிரதேச கடலில் வைத்து மீன்பிடி படகொன்று கண்டுள்ளது.
அவர்களின் பயணப்பாதையை நோக்கும் போது வடமாகாண கடலில் அந்த கடற்றொழிலாளர்கள் தத்தளிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களும், கடற்றொழிலாளர்களும் இவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேடுதல் பணி தீவிரம்
மேலும் “இவ்விடயத்தில் சிரத்தையெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு“ அதிகாரிகளை
காணாமல் போனவர்களின் குடும்பத்தின் சார்பில் இங்கு கருத்து தெரிவித்த
அவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்,
“கடற்படை, பொலிஸ், கடற்தொழில் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலையே தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.
ஊடகங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகளை எழுதியுள்ளார்கள்.
இங்கிருக்கும் எல்லோருக்கும் உண்மை நிலை தெரியும். இந்திய ராமேஸ்வரத்தில் உள்ளவர் அவர்களை தொடர்புகொண்டதாக அறிந்து அவரை நாங்கள் தொடர்புகொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டுள்ளோம்.
அவர்களின் தொலைபேசி செயற்பாட்டில் உள்ளது. ஆனால் அவர்களுடன் பேச முடியாதுள்ளது.
அவர்களை பாதுகாப்பாக மீட்க சகல வழிகளிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். இறைவனின் உதவியுடன் அவர்களை மீட்போம்“ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ் ஊடக சந்திப்பானது வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



