கடுமையான நிதி நெருக்கடியில் 5.1 பில்லியன் ரூபாவை வசூலிக்க முடியாமல் திணறும் முக்கிய அமைச்சு
நுகர்வோரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபாவை நுகர்வோரிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாத நிலையில், ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த நிலுவைத் தொகையில், உள்நாட்டு நுகர்வோர் சுமார் 3700 மில்லியன் ரூபாவும்,மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளரான ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், 700 மில்லியன் ரூபாவை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கமைய, மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிறவற்றிலிருந்து 60 மில்லியன் ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று காலப்பகுதியில் வழங்கப்பட்ட கால அவகாசமே நீர் கட்டணக் கொடுப்பனவுகளில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண உரிய கொடுப்பனவுகளை விரைவில் செலுத்துமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.