மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்புக்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளாகிய வாகரை, பனிச்சங்கேணி, கொக்கட்டிச்சோலை, கிரான்குளம் உள்ளிட்ட இடங்களுக்கான கள விஜயங்களை நேற்று(12) மேற்கொண்டுள்ளார்.
மேலும் மாவட்டத்திலுள்ள நீரியல்சார் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுத்தல், புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள் போன்றவற்றினை அமைத்தல், இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலைமையையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்துதல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது ஒவ்வொரு பிரதேசங்களிலும் காணப்படும் நீர் வளங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமூகமாக மாற்றுவது என்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும் கடந்த காலங்களில் முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவு ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுமார் 380 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட இறால் வளர்ப்பு திட்டத்தினை விரைவு படுத்துவது தொடர்பாகவும், மாவட்டத்தில் இயற்கையாக அமையப்பெற்ற சில பகுதிகளாகிய கோட்டைக்கல்லாறு, களுவன்கேணி, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் புதிய துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகள் அமைத்தல் தொடர்பாகவும் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இராஜாங்க அமைச்சரிடம் முன்மொழியப்பட்டன.
மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை அறிமுகம் செய்தல் தொடர்பாகவும், கடல் சார் உற்பத்தி தொடர்பான தொழிற்சாலைகளை நிறுவுதல் போன்றவை தொடர்பான பல வேலைத்திட்டங்கள் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இராஜாங்க அமைச்சரிடம் முன்மொழியப்பட்டன.
இவ் விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் பல துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






