இந்திய மீனவர்களால் கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்
எல்லை மீறிய இந்திய மீனவர்களால் வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று வலைகளைக் கடலில் விட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமது வலைகளில் மீன்களை எடுப்பதற்காகப் படகுகளில் சென்று தேடியபோது பலரது வலைகள் காணாமல் போயுள்ளதுடன், பலரது வலைகள் வெட்டப்பட்டும் துண்டாடப்பட்டும் காணப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் தலா மூன்றரை இலட்சம் பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளன. இவ்வாறான சம்பவம் பல தடவைகள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக கடற்றொழிலமைச்சருடன் பல தடவைகள் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் தற்போது கோவிட் காலத்தில் கடன்பட்டு வலைகளைக் கொள்வனவு செய்து தொழிலிற்குச் சென்றுவந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டதுடன், பலரது வலைகளும் காணாமல் போயுள்ளன.
இதனால் இம்மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனாளியாகியுள்ளனர்.