மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ளவேண்டும்: மனோ கணேசன் (Photos)
புதிய இணைப்பு
இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்வதன் மூலமே உண்மையான புதிய இலங்கையைக் கட்டி எழுப்ப முடியும் என முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.
முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களைக் கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாகத் தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள்.
இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும். இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்குச் சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும்.
தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை பெருகின்ற முழுமையான குடிமக்களாகத் தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று நாட்டில் காலிமுகதிடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள்.
இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள். காலிமுகதிடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
அவர்கள் இன்று சொல்லலும் “கோடா கோ ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம்.
இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையைக் கட்டி எழுப்ப முடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொஹுவளை, இலக்கம் -28, ஶ்ரீமகா விகாரை மாவத்தையில் அமைந்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பது, பொதுமக்கள் மீதான அடக்குமுறை மற்றும் கைது அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினை ஆற்றுதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல் போன்ற விடயங்கள் இருதரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ் முற்போக்கு முன்னணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், துணைத் தலைவர் திகாம்பரம், பொதுச் செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர் பிரியாணி குணரத்தின ஆகியோரும் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர்களான புபுது ஜயகொட, சஞ்சீவ பண்டார ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
