ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு! - இந்தியா மீண்டும் யோசனை
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான யோசனையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்காக தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம் அவற்றை அடைவது நாட்டின் அமைதி, நல்லிணக்கம், அனைத்தையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் பலத்துக்கு பங்களிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய உயர் ஸ்தானிகர் வடக்கில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையின் போது இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு இந்தியாவின் நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அவர் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
2021 மார்ச் 13ம் திகதியன்று இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.