மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம்
மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் நேற்று புதன்கிழமை (8) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் முக்கிய குளங்களில் ஒன்றான கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது கடந்த காலங்களில் 10:1 என்ற அடிப்படையில் பயிர்ச்செய்கை நடைபெற்றது.
ஆனால், குளத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் 'டிட்வா' புயலால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை 13:1 என்ற விகிதாசார அடிப்படையில் நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 2,409 ஏக்கர் நிலத்தில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும். வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பயிர்ச்செய்கை, குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இந்த முறை ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, ஜூன் மாதத்துக்குள் அறுவடை நிறைவு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு ஹெக்டேர் மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேவையான யூரியா மற்றும் ஏனைய உரங்களை விவசாயிகளுக்கு விரைவாக விநியோகிக்க தேவையான கொள்வனவு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை சிறுபோக நிலங்கள் உரிய விவசாயிகளுக்கு மட்டுமே பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப் போல பொது அமைப்புகள், கோயில்கள் அல்லது தேவாலயங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தவிர்த்து, மேலதிக இடங்களில் சட்டவிரோதமாக பயிர் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே 18 விவசாயிகளுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அதிக பட்ச தண்டப்பணம் விதிக்கப் படுவதோடு, விவசாய அமைப்புகளில் இருந்து தடை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நீதிமன்றம் செல்லாமல் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை தீர்த்துக் கொள்ள 'நியாய சபை' மாதம் ஒருமுறை மன்னார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
எதிர்காலத்தில் இதற்கு நிரந்தர நீதிபதி ஒருவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் உரிய காலப்பகுதியில் பயிர்ச் செய்கையை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், நெல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.



