தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! - மமதா பானர்ஜி அறிவிப்பு
நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது, எனவே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மமதா முதலில் 1200 வாக்குகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் நான் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பேன். நந்திகிராமை குறித்து கவலைப்பட வேண்டாம்.
நான் நந்திகிராம்மில் தோல்வி அடைய காரணம் உள்ளது. நான் மிகப்பெரிய அமைப்பை எதிர்ப்பு போட்டியிட்டேன். நந்திகிராம் மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கவலை இல்லை.
நாங்கள் 221 இடங்களில் வெல்கிறோம். பாஜக தேர்தலிலேயே தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் ஆணையம் கடைசியில் முடிவை மாற்றிவிட்டது. நான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டு பின் முடிவை மாற்றிவிட்டது.
நாங்கள் நீதிமன்றுக்கு செல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பேன். தேர்தல் ஆணையத்தின் செயல் தவறானது. தேர்தல் ஆணையம் இப்படி செயல்பட கூடாது.
தேர்தல் ஆணையத்தின் கொடுமைகளை நாங்கள் எதிர்கொண்டோம். பாஜக தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போது கீழ்த்தரமான அரசியலை அந்த கட்சி செய்கிறது.
எங்களுக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கோவிட்டிற்கு எதிராக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முழு கவனத்தை செலுத்துவேன், பதவி ஏற்பு விழா சிறிய அளவில் மட்டுமே நடக்கும் என தெரிவித்துள்ளார்.