இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய முக்கிய நாடு!
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை உடன் அமுலாகும் வகையில் மலேசியா நீக்கியுள்ளது.
இதன்படி இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட தொழிலாளர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை மலேசியா நீக்கியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில, பயணிகள் மலேசியாவின் குடிவரவுத் துறையின் MyTravelPass அல்லது MyEntryImmigration போர்ட்டலில் இருந்து நுழைவு ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும் என்பதுடன், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டைமி டவுட் கருத்து வெளியிடுகையில்,
தொழிலாளர்கள் நாட்டிற்கு வர அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் MyTravelPass இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அனைத்து நாடுகளுக்குமான சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மலேசியாவில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றின் டொல்டா பரவல் காரணமாக இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மே மாதம் பயணக் கட்டுப்பாடுகளை மலேசியா விதித்தமை குறிப்பிடத்தக்கது.