கிராமிய வைத்தியசாலைகளை செயற்திறன் மிக்கதாக மாற்றும் செயற்பாடு! இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை
கிராமிய வைத்தியசாலைகளை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராமிய வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையிலான கள விஜயங்களை வியாழேந்திரன் முன்னெடுத்துவருகின்றார்.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவனை கிராமிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
பத்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒட்சிசன் உற்பத்தியாக்கி
இதன்போது வைத்தியசாலையின் நிலைமைகள்ஈ, வளங்களின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடிய வியாழேந்திரன் வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவை கருதி பத்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒட்சிசன் உற்பத்தியாக்கி இயந்திரம் ஒன்றை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இதன்போது வியாழேந்திரன் உறுதியளித்துள்ளார்.
வைத்தியசாலைகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றல்
கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கிராமிய வைத்தியசாலைகளை பலப்படுத்தி மக்களுக்கான சேவையினை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் துறைநீலாவனை கிராமிய வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு
மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.


