இடதுசாரி கட்சிளுடன் அரசியல் புரட்சிக்கு தயாராகி வரும் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இடதுசாரி கட்சிகளை இணைத்து கொண்டு அரசியல் புரட்சி ஒன்றுக்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணையும் கட்சிகள் பற்றி தற்போதே கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உள்ளுக்குள் நடக்கும் அனைத்தையும் ஊடகங்களுக்கு கூற முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணையவுள்ளவர்களுடன் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளுக்குள் நடக்கும் அனைத்தையும் ஊடகங்களுக்கு கூற முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தைகள் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் துரிதமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு சவாலான கட்சியல்ல.கடந்த வாரத்தில் மூன்று கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.தற்போதைய அரசியல் வியாகுல நிலைமையில் நாட்டுக்குள் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக அப்படியான அரசியல் கட்சிகள் உருவாகும். அவற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு சவால் இல்லை.
கோட்டாபயவை இன்னும் சந்திக்கவில்லை
முன்னாள் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்த பின்னர் அவருடன் இன்னும் பேச முடியவில்லை. தற்போது காணப்படும் பணிகள் காரணமாக அவரை சந்தித்து பேச முடியவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.