மகிந்தவின் பதவி விலகல் தொடர்பில் ரணிலுக்கு கிடைத்த செய்தி
பிரதமர் பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் எனவும் பிரதமர் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நடைமுறையில் உள்ள வரவு-செலவு திட்டம் நீக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வரவு –செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நடுத்தர மக்கள் பொருளதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.நடைமுறையில் உள்ள வரவு- செலவு திட்டத்தை புறக்கணித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் கடன் நிலைபேண் தன்மையினை உறுதிப்படுத்த வேண்டும்.பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டுமாயின் வெளிநாட்டு கடன் செலுத்தல் நிலைமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
புதிய பொருளாதார திட்டங்கள் வகுக்கப்படல் அவசியம் அத்துடன் அரசாங்கம் மாறும் போது பொருளாதார கொள்கை மாற்றமடையாத வகையில் நிலையாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
நிறைவேற்று முறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தொடர்பில் அவதானம் செலுத்தி நாடாளுமன்ற மட்டத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டும் அரச நிதி அதிகாரம் முழுமையாக நாடாளுமன்றிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். பிரதமர் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல்,தேசிய சபை ஊடாக இடைக்கால அரசாங்கம்,அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை உள்ளிட்ட யோசனைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.