உணர்வுடன் கலந்த மாவீரர் நினைவெழுச்சி! தமிழர் பகுதியில் திரண்ட பல்லாயிரம் மக்களின் கண்ணீருடன் நினைவேந்தல் (video)
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
வடமராட்சி உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்திற்கு அருகில் மாவீரா் நாளான இன்று வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரா் துயிலும் இல்ல வளாகத்தில் 551வது படைப்பிாிவு முகாம் அமைத்து தங்கியுள்ள நிலையில் துயிலும் இல்லத்திற்கு வெளியே ஈகை சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பகுதியில் வீதியின் இரு பக்கங்களிலும் வீதி மறிப்புக்கள் போடப்பட்டு இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி: கஜிந்தன்
நெல்லியடி மகா வித்தியாலயம்
மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினர் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனர்.
இதன்போது மாவீரர்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
செய்தி:கஜிந்தன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்., வடமராட்சி - வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி:ராகேஷ்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
யாழ்.வடமராட்சி - எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகை சுடரினை மேஜர் சோதியா (சோதியா படையணி) அவர்களுடைய தாயாா் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கான பாடல் ஈகையோருக்கான ஈகை சுடர்கள் எற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி: தீபன்
மன்னார்
மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
யாழ். தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் யாழ். தீவகம் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினரின் தலைமையில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மாலை 06.05 மணிக்கு மணியோசை ஒலி எழுப்பப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் உறவினர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் மதகுருமார்கள் அரசியல்வாதிகள் மாவீரர்கள் பெற்றோர்கள்
உறவினர்கள் உரித்திடையோர் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்
செய்தி:தீபன்
உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்
யாழ், வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணியளவில் இடம்பெற்றது.
செய்தி:தீபன்
யாழ். நாவற்குழி கடல் நீரேரி
கடற்புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி உரிமைக்காக வித்தாகிய கடற்புலி மாவீரர்களுக்கு யாழ். நாவற்குழி கடல் நீரேரியில் ஜனநாயக போராளிகள் கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி:தீபன்
கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லம்
அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி:ருசாத்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம்பெற்றது.
இதன் போது ஈகைச்சுடரை மாவீரரின் பெற்றோரான இராசையா சாந்தநாயகி குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி:தீபன்
யாழ். நல்லூர் தியாக திலீபன் நினைவேந்தல் இடம்
யாழ். மாநகர சபையின் எற்பாட்டில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக தியாங்களை செய்தவர்களுக்கான மாவீரர் தின நினைவேந்தல் இன்று யாழ். நல்லூர் தியாக திலீபன் நினைவேந்தல்விடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
இதில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், தலைமையில் பிரதான ஈகைசுடர் எற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள், குடும்பத்தினர்கள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுமக்கள் பலரும் பங்குயெடுத்தனர்.
செய்தி:கஜிந்திரன்
திருகோணமலை
திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாவீரர்தின நினைவேந்தல் இடம்பெற்றது.
இதனை சம்பூர் - மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் ஆயிரக்கணக்கான உறவுகள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது மாலை 6.05 மணியளவில் பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பதுர்தீன் சியானா
இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்திலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
செய்தி: தீபன்
பண்டி விரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்
மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்திற்கு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான
தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி :ஆஷிக்