உள்நாட்டு யுத்தத்தின்போது விமானியாக பணியாற்றியவர் கறுப்பு பட்டியலில் இணைப்பு!வெளியான பின்னணி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளரான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி எயார் மார்ஷல் சம்பத் துய்யகொன்ன, கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அநுரவின் கேள்வி
நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“தேசிய பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துத் தெரிவித்த காரணத்தாலேயே சம்பத் துய்யகொன்ன கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
அதில் எவ்வித அரசியல் தலையீடோ அரசியல் பழிவாங்கலோ கிடையாது.
அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், விமானப் படை அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள் பதவியில் இருக்கும் போது தேர்தலில் வாக்களிப்பதை தவிர செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது.
சேவையில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர்கள் தாராளமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடலாம்.
ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்பதால் அவரை கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.”என தெரிவித்துள்ளார்.