சபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்படவுள்ள நிதி சீராக்கல் சட்ட மூலம் குறித்த விளக்கம்
உத்தேச நிதி சீராக்கல் சட்ட மூலம் குறித்த சட்ட விளக்கம் சபாநாயகருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உத்தேச நிதி சீராக்கல் சட்ட மூலம் குறித்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரட்ன ஆகிய நீதியரசர்களினால் இந்த மனுக்கள் இரண்டு நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணைகளின் போது உத்தேச சட்டத்தில் மேற்கோள்ளப்பட உள்ள திருத்தங்கள் குறித்த ஆவணமொன்றை சட்ட மா அதிபரின் சார்பில் அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தார்.
இந்த உத்தேச சட்டத்தின் மூலம் நிதிச் சலவை செய்யக்கூடிய சாத்தியம் ஏற்படும் என மனுதாரர்களின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட வாதங்களை அரசாங்க தரப்பு நிராகரித்தது.
இந்த சட்டத் திருத்தங்களின் மூலம் நிதிச்சலவை செய்ய அனுமதியளிக்கப்படாது எனவும் வரி செலுத்தாது இருந்த பலரை வரிச் செலுத்தச் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.