கோவிட் மூன்றாவது அலை ஈஸ்டர் தாக்குதலுக்கு சமனானது - குமார் குணரட்னம்
இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு சமனான சம்பவமே நடந்துள்ளது எனவும், மூன்றாவது அலை ஏற்படலாம் என தகவலை அறிந்து அரசாங்கம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குணரட்னம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைய காலமாக ஏற்பட்ட வேகமான மரண வீதம் அதிகரிப்பு, நோயாளர்கள் அதிகரிப்பு, நோய் வேகமாக பரவி வருவது ஆகியவற்றுக்கு தெளிவாக தற்போதைய அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
இது தெளிவாக மனித இனத்திற்கு எதிரான குற்றம். சரியான வேலைத்திட்டம், சரியான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் கலந்துரையாடவில்லை.
இதற்கு இடையில், தம்மிக்க பாணி, கலசங்களை ஆற்றில் போட்டு, முற்றாக மூட நம்பிக்கைகளின் பின்னால் சென்று அமைச்சர்களும் அதற்கு உந்து சக்தியை வழங்கினர். சுகாதார அமைச்சர் நேரடியாக இதில் தலையிட்டு இருந்தார்.
உண்மையில் இது இரண்டாவது ஈஸ்டர் தாக்குதலை போன்றது. தகவல்களை அறிந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவிட் நிதியத்திற்கு என்ன நடந்தது என்ற வெளிப்படைதன்மை இல்லை. எப்படி நிதியத்திற்கு பணம் கிடைத்தது, அதனை செலவிட்ட விதம், செலவிட்டதன் உண்மையான விபரங்கள், உண்மையான கணக்கீடுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பலவந்தமாக அன்பளிப்பாக பெற்று இந்த நிதியத்தை ஆரம்பித்தனர் எனவும் குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.