12 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை அச்சிடல் செலவு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை அச்சிடும் செலவை குறைத்துக்கொள்ள குற்ற புலனாய்வுத் திணைக்களம் இணங்கியுள்ளது.
குறித்த குற்றப்பத்திரிகைகளுக்காக, சுமார் 2000 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்களை அச்சிடுவதற்கான செலவாக சுமார் 1.5 மில்லியன் ரூபாய் அவசியம் என்று அரச அச்சகத் திணைக்களம் முன்னதாக மதிப்பிட்டிருந்தது.
பேச்சுவார்த்தை
இருப்பினும், அரச அச்சகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்தத் தொகையை 866,565 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, வழக்குத் தொடுப்பவர் தரப்பில் முன்னிலையான துணை மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹகம கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த குற்றப்பத்திரிகைகளை அச்சிட குறைந்தபட்சம் 21 நாட்கள் தேவைப்படும் என்று அரசு அச்சகம் தெரிவித்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 குற்றவாளிகளில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் உள்ளடங்குகிறார்.
அதேநேரம் வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஜெயநாத் புத்பிட்டிவை கைது செய்ய இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாக துணை மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
