எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக கச்சத்தீவு திருவிழா: அமைச்சர் உறுதி
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
“கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது. வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள். கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர்.
நீண்டகால கலந்துரையாடல்
கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்ய வேண்டும். சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை.
அத்துமீறி நுழைதல்
அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி கடற்றொழிலாளர் நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கடற்றொழிலாளர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில், தமிழக கடற்றொழிலாளர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
