ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு நாளை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான மனு மீதான தீர்ப்பை நாளை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் இன்று அறித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் குறித்து பேலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பிணை கோரி, கம்பஹா நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் சம்பந்தமான விசாரணைகளை அன்றைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளரான ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் நடத்தியதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டன.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய நிஷாந்த சில்வா, நாட்டில் இருந்து வெளியேறி சுவிஸர்லாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.