அரசின் முடிவுகளுக்கு எதிராக வடக்கில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்!
யாழ்ப்பாணம்
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதில் ஓர் அங்கமாக வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளார்.
வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு - கிழக்கில் உள்ள கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மூளாயில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் "உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளே நாட்டின் முள்ளந்தண்டு என்று கூறிவிட்டு விவசாயிகளின் முள்ளந்தண்டினை முறிக்காதே, உர என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அதேபோன்று சாவகச்சேரியிலும் விவசாயிகளும் பொது மக்களும் கிளர்ந்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அரசின் முடிவுகளுக்கு எதிராக விவசாயிகள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
மேலும், கீரிமலையில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், விவசாய சம்மேளத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா
வவுனியா, கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைக்கள காரியாலயம் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி போன்றவை விவசாயிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் பாதித்துள்ளது எனத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அரசே எமது விவசாயிகளுக்கும் எமது மண்ணுக்கும் சீன உரக்கழிவுகள் வேண்டாம், அரசே விவசாயிகளுக்கு பசளை வேண்டும், அரசே விவசாயிகளுக்கான உரத்தையும் உர மானியத்தையும் உடனே வழங்கு, சேற்றில் கால் வைக்காத உனக்கு சோற்றில் கை வைக்கவும் உரிமை இல்லை, கோட்டாபய அரசே யூரியா பசளையை நிறுத்திய நீ ஏன் இயற்கை பசளையை தரவில்லை' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
விவசாயிகள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் கலந்து கொள்ளதாக போதும் தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சுமந்திரன், அ.ரேணுகா, த.பரதலிங்கம், மற்றும் புதிய மாக்சிச லெனின் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, விவசாயிகளுக்காக கமநல சேவை நிலையம் முன்பாக போராட்டத்தை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மாந்தைகிழக்கு - பாண்டியன்குளம் மற்றும் துணுக்காய் பிரதேச விவசாயிகள் இன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த்திருந்தனர் அதில் ஓர் அங்கமாக துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே , விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பாண்டியன்குளம் கமநலசேவை நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினால் பிரதேச விவசாய போதனாசிரியரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு - கிழக்கில் உள்ள கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது