யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி
யாழ் மாநகர சபையில் முதல்வர் தெரிவு
யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.
யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து
இந் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசு கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
சொலமன் சிறில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது, இப்போதைய குழப்பமான மாநகரச் சூழ்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது எனும் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.
நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக இறுதி முடிவெடுப்பது என கட்சியால் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
கட்சித் தலைமையிடம் கடிதம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் எனக் கோரும் கடிதம், கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற வட்டார உறுப்பினர்கள் சிலர் இணைந்து இந்தக் கடிதத்தை கையளித்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இ.ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் முன்னாள் நாடாளுடமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலுக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கட்சிக்குள் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.