யாழ். மருத்துவபீட மாணவன் மரண விவகாரம்! பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள உத்தரவு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம், பொலிஸ்மா அதிபருக்குப் முக்கிய உத்தரவு விடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 3ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ஆனால், மரணம் தொடர்பில் பொலிஸார், தற்கொலை எனும் ரீதியில் விசாரணைகளை கிடப்பில் போட்டு இருந்தனர்.
குறித்த சம்பவத்தில் மரணமடைந்தமை தெரியவருவதற்கு முன்பதாக, அதாவது இரண்டரை மணித்தியாலங்களுக்கு முன்னரே அவர் மரணமடைந்தமை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் எந்ததொரு நடவடிக்கையும் எடுக்காதமையால் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையிலேயே, இறந்த விடயம் தெரியவருவதற்கு முன்பாக இறந்தமை தொடர்பில் தகவல் வெளியானமை தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம், பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.