கோப்பாய் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபொலிஸார் கல்வியங்காடு பாடசாலையில்
யாழ். கோப்பாய் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார் வீட்டில் இருந்து வெளியேறும் பொலிஸார் கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையில் குடிபுகுகின்றனர்.
தனியாருக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியிருந்த கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் அந்தக் காணியை உரிமையாளரிடம் கையளிக்க உத்தரவிட்டதற்கு அமைய பொலிஸார் அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
இவ்வாறு வீட்டுடன் கூடிய காணி கையளிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இட நெருக்கடியைத் தீர்க்கவே பொலிஸார் தங்குவதற்கான பாவனைக்கு கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையைப் பொலிஸார் பயன்படுத்தவிருக்கின்றனர்.
இவ்வாறு பாடசாலை பொலிஸாரின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ஆளுநரின் அனுமதியின் பெயரில் 6 மாத காலங்களுக்குத் தற்காலிக இது வழங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பாடசாலை சில காலம் இயங்காமல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




