ஜனாதிபதி மீது அவதூறு குற்றச்சாட்டு: மாலி நாட்டு எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசான் ஒட்டாராவை சமூக வலைதளங்கள் மற்றும் நேர்காணல்களில் அவதூறாகப் பேசியதற்காக, மாலி நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமது ஹாவா காசாமா என்பவருக்கு ஐவரி கோஸ்ட் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மாலி நாட்டின் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காசாமா, கடந்த ஜூலை மாதம் ஐவரி கோஸ்ட் சென்றிருந்த போது அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 வருட சிறை தண்டனை
84 வயதான ஐவரி கோஸ்ட், ஜனாதிபதி அலசான் ஒட்டாராவை இவர் "சர்வாதிகாரி" என்றும் "மாலி நாட்டின் எதிரி" என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விடயம், அந்நாட்டு நிறுவனங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளார். இதனையடுத்து, காசாமாவிற்கு வழங்கப்பட்டுள்ள 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மிக அதிகமானது என்றும், இதுவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் அவரது சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளான மாலி மற்றும் ஐவரி கோஸ்ட் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சுமூகமான உறவு இல்லை.
நாடுகளுக்கிடையில் மோசமாகும் உறவு
கடந்த 2020-இல் மாலியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 49 ஐவரி கோஸ்ட் வீரர்கள் மாலியில் கைது செய்யப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போரை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், கசப்புணர்வு நீடிக்கிறது. இப்படியொரு நிலையில், மாலி அரசு பிரான்ஸ் உடனான உறவைத் துண்டித்துவிட்டு ரஷ்யாவின் ஆதரவை நாடியுள்ளது.
ஆனால், ஐவரி கோஸ்ட் இன்னும் பிரான்ஸின் நெருங்கிய நட்பு நாடாகவே இருந்து வருகிறது.
ஒரு அண்டை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அந்நாட்டு ஜனாதிபதியை விமர்சித்ததற்காகச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவும் அரசியல் பதற்றத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.