பல கோடி ரூபா பணத்தின் பின்னணியில் இஷாரா செவ்வந்தி - சி.ஐ.டியினர் வெளியிட்ட பகீர் தகவல்
போதைப்பொருள் கடத்தல் மூலம் கெஹெல்பத்தர பத்மே வருமானமாக பெற்ற பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணத்தை, கம்பஹா ஒஸ்மன் என்பவரின் ஊடாக சட்டபூர்வமான பணமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு பிரதான முகவராக தடுப்புக் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே தனது பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலம் பெற்ற பல கோடி ரூபாய் பணத்தை, சில நாட்களுக்கு ஒருமுறை ஒஸ்மனிடம் ஒப்படைக்கும் பணியை இஷாரா செவ்வந்தியே மேற்கொண்டு வந்துள்ளார்.
சட்டவிரோத பணம்
இவ்வாறு கிடைக்கும் சட்டவிரோதப் பணத்தை, ஒஸ்மன் தனது வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளார்.

அதன் மூலம், அவற்றை சட்டபூர்வமான பணமாக மாற்றியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகளுக்கு இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரைத் தேடி பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர் விசாரணைகள்
கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் வைத்து படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளார்.

கம்பஹா ஒஸ்மன் என்பவரும் தற்போது தடுப்பு காவலில் உள்ளதோடு, அவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் மேலும் பல குற்றச் செயல்கள் தொடர்பில் கெஹெல்பத்தர பத்மேவிடம் விசாரணை நடத்தவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.