ஆயுத கடத்தலில் முக்கிய புள்ளியாக செயற்பட்ட இலங்கை தமிழரொருவர் தமிழகத்தில் கைது
தமிழகத்தின், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியை நோக்காக கொண்டதா? என்ற அடிப்படையில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
300 கிலோ ஹெரோயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 9 மி.மீ வெடிமருந்துகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் என்பன தமிழகத்தின், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் கடற்கரையில் வைத்து கடந்த மார்ச் 18 ஆம் திகதி பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய கடலோரக் காவல்படையால் இந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது, 6 சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் அந்த கடத்தலின் முக்கிய இடத்தில் செயற்பட்டவர் என நம்பப்படும் சென்னையின் புறநகரில் வசித்து வந்த, கொழும்பைச் சேர்ந்த, இலங்கை தமிழரான சுரேஷ் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தினால் விசாரிக்கப்படுவதால், அதனை உன்னிப்பாக கவனிக்கத் தவறிவிட்டதாக கேரளா மற்றும் தமிழக உளவு அமைப்புகள் பல சுட்டிக்காட்டியிருந்தன.
இந்தநிலையில் விசாரணையின் போது, ஆறு சிங்களவர்களும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், சுரேஷ் ராஜனுக்கும் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இன்னும் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுக்களுடன் தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் விசாரணையின் போது, குறித்த படகில் இருந்து கைப்பற்றப்பட்ட "துரையா" என்ற கைபேசியின் (மேம்பட்ட செயற்கைக்கோள் கைப்பேசி) பாய் இணைப்புக்கான சான்றுகள் கிடைத்தன.அது சுரேஷ்ராஜன் மற்றும் அவரது நண்பரான சௌந்தரராஜன் ஆகியோரை கைது செய்வதற்கு முக்கிய ஆதாரமாக இருந்தது என்று இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, மார்ச் 18 சம்பவம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. ராஜனின் கைதுக்குப் பின்னர், அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீமுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. அவர் துபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே அடிக்கடி பயணம் செய்துள்ளார்.
அத்துடன் அவர் இந்தியாவின் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் முக்கிய பங்கு வகித்தமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை 2020 ஒக்டொபரில் இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரான மதுஷ் லக்ஷித என்ற 'மாகந்துரே மதுஷை' ராஜன் சந்தித்ததற்கான ஆதாரம் இருப்பதாக தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சுரேஷ் ராஜன் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் விடுதலைப்புலிகள் மற்றும் அதன் அனுதாபிகளுடன் நெருக்கமாக பணியாற்றியதற்கான ஆதாரங்களும் உள்ளன. அதேநேரம் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து ஏகே -47 துப்பாக்கிகள் விடுதலைப் புலிகளின் "ஸ்லீப்பர்" உறுப்பினர்களுக்காகக எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் இந்திய புலனாய்வு அதிகாரி கூறியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.