சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறியமை, இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததன் பின்னர், அவர் தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இதன்படி, விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கிய நாட்டின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், கொழும்பில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் விமல் வீரவங்ச தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி வெளியேறினார்.
மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியாகி அவருடைய சொந்த ஊரான தங்காலைக்கு சென்றார்.
இதன்பின்னர் மகிந்த ராஜபக்சவை காண்பதற்காக தங்காலையில் அமைந்துள்ள அவரது கால்டன் இல்லத்திற்கு மக்கள் சென்றனர். மகிந்தவின் சுக துக்கம் குறித்து விசாரிப்பதற்காக தாம் வந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சவுக்கு பலர் வீடு வழங்குவதற்கு முன்வந்ததாக கூறப்பட்டது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



