அக்கரைப்பற்று பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை தீவிரம் (Photos)
நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அக்கரைப்பற்று மத்திய மணிக்கூட்டுக்கோபுர பகுதியில் இன்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை எச்சரிக்கை செய்ததுடன், மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களையும் திருப்பி அனுப்பியதை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், வியாபார நிலையங்கள் என்பன மூடப்பட்டிருந்ததுடன், வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆயினும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட சிறிய வாகனங்களின் நடமாட்டத்தை வீதிகளில் காணக் கூடியதாகவுள்ளது. இந்நிலையில் இன்று திறக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தக நிலையங்கள் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து மூடப்பட்டன.
காலிமுகத்திடல் சம்பவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் ஏற்பட்டு வரும்
அசம்பாவிதங்கள் போன்று அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெறாத வகையில்
இருப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள
நிலையில், நேற்று முன்தினம் டயர்கள் எரிக்கப்பட்ட போதும் அசம்பாவிதங்கள் எதுவும்
இதுவரை இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.